Wednesday, June 16, 2010

குற்றவாளிகளின் சொர்க்கம் இந்தியா!


 
விட்டில் பூச்சிகள் பொட்டுப் பொட்டென்று விழுந்து சாவதைப்போல், மனிதப் பூச்சிகள் பொத்துப் பொத்தென்று விழுந்து மடிவதைக் கேள்விப்பட்டிருக்கிறோமா? அதற்கு என்ன காரணம் என்று அறியப் போனவனும் செத்து மடிந்தான். சில மணி நேரத்துக்குள் அந்த ஊரே பிணக்காடாகிவிட்டது.

யாரையும் அடக்கம் செய்வதற்கு யாரும் இல்லை. குடும்பங்குடும்பமாக அழிவு நேர்ந்த காரணத்தால், துக்கம் கொண்டாடக்கூட யாரும் எஞ்சி இருக்கவில்லை. பிணங்களை மலைபோல் அடுக்கி, அன்றைய மத்தியப் பிரதேச முதல்வர் அர்ஜுன் சிங் ஒரே "மூச்சில்' கொளுத்திவிட்டார்.

மூத்தோர், இளையோர், சிறார் என்னும் வேறுபாடு சாவுக்கு இல்லைதான்; வயிற்றிலிருக்கும் பிள்ளையைக் கூடத் தாயை அலற அலற வைத்துப் பிதுக்கிக் கொண்டு போய்விடும் கொடியவன்தான் கூற்றுவன்.

ஆனால், கூற்றுவன்கூட இப்படிக் கொத்துக் கொத்தாகக் கூட்டம் கூட்டமாக அழிப்பதில்லை. ஓரிருவர் அல்லர்; இருபத்திஐயாயிரம் பேர் சாகடிக்கப்பட்டவர்கள். கண் இழந்தவர்கள்; நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஊனமடைந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து எழுபத்திநான்காயிரம்! அது நடந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் குழந்தைகள் குறைபாடோடுதான் பிறக்கின்றனர்!

போபாலில் எந்தவிதப் பாதுகாப்பு ஏற்பாடும் இல்லாமல் கட்டப்பட்டு, நம்முடைய அரசால் அனுமதிக்கப்பட்ட யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து கசிந்த நச்சுவாயுதான் ஊரே பிணக்காடாக மாறக் காரணம்!

அந்த நிறுவனத்தின் முதலாளி ஆன்டர்சன் என்னும் அமெரிக்கன்! இந்தக் கயவன் தன்னுடைய நாட்டை விட்டு விட்டு, தொழில் தொடங்க இந்தியாவுக்கு வந்த காரணம்,  இங்கேதான் மனித உயிர்களுக்கு விலை இல்லை என்பதால்தான். பிழைகள் நேராதவாறும், ஒருவேளை நேர்ந்தால் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன என்பது குறித்தும் இங்கேதான் எந்தக் கேள்வி கேட்பாடுகளும் இல்லை.

ஆட்சியாளர்கள் மேற்சட்டை, உள்சட்டை, காற்சட்டை என்று எல்லாச் சட்டைகளிலும் பெரிய பெரிய பையாகத் தைத்து வைத்திருப்பார்கள்; அவற்றை நிரப்பினால் போதும் என்பது ஒன்றுதான் இங்கு எழுதப்படாத அரசியல் சட்டம் என்பதை அறிந்துதான் இந்தியாவுக்கு வந்தான் ஆன்டர்சன். இங்கே தொழிலாளிகளுக்குக் கூலியும் குறைவு என்பது அவனுக்கு ஏற்பட்ட இன்னொரு கவர்ச்சி.

அமெரிக்காவில் பாதுகாப்புத் தொடர்பான கொள்கைகள் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதால், ஏனோதானோவென்று கட்டப்படுகிற, மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலான தொழிற்சாலைகளெல்லாம் மூன்றாம் உலக நாடுகளுக்குக் குறிப்பாக இந்தியாவுக்குத் தள்ளிவிடப்படுகின்றன. இளிச்சவாய் நாடு இந்தியாதானே!

இத்தனை உயிர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் அமெரிக்க முதலாளி கொடுத்த இழப்பீடு 470 மில்லியன் டாலர்; ஒவ்வொரு தலைக்கும் 200 டாலர்; இந்தியனின் உயிருக்கும் ஊனத்துக்கும் விலை பத்தாயிரம் ரூபாய்; காங்கேயம் மாட்டின் விலையும், இந்தியனின் விலையும் ஒன்றுதான்!

இந்த வழக்கு சாதாரண குற்றவியல் நீதிமன்றத்தில் 26 ஆண்டுகள் நடந்திருக்கிறது. இதற்குள் பல அரசுகள் மாறிவிட்டன; பல மத்தியப் புலனாய்வு அதிகாரிகள் ஓய்வு பெற்று விட்டார்கள்; வழக்கை விசாரித்த நீதிபதிகளில் பலர் செத்தே போய்விட்டார்கள். கடைசியில் நீதியும் செத்துப் போய்விட்டது!

முதலில் இந்த வழக்கு 304(2) என்னும் குற்றப்பிரிவின் கீழ்தான் நடந்தது. அந்தச் சட்டப்படி குற்றவாளிகளை 10 ஆண்டுகள் தண்டிக்கலாம்.

அகமதி என்னும் உச்ச நீதிமன்ற நீதிபதி குறுக்கிட்டு விசாரித்து, அதை 2 ஆண்டுகள் மட்டுமே தண்டிக்கக்கூடிய 304 ஏ என்னும் எளிய பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

கேவலம் மோட்டார் ஓட்டி யாரோ ஒருவரின் மீது ஏற்றி விடுகிற பொறுப்பின்மையும், 25,000 பேர் சாவதற்கும், 5 லட்சம் பேர் ஊனமுறுவதற்கும் காரணமான பொறுப்பின்மையும் ஒன்றுதான் என்று அரசமரத்தடியில் கட்டைப் பஞ்சாயத்துச் செய்கிறவன் கூடத் தீர்ப்புச் சொல்ல மாட்டானே! இதைச் சொல்வதற்கு ஓர் உச்ச நீதிமன்றம்!

அதைவிடக் கொடுமை அந்த உச்ச நீதிமன்ற நீதிபதி அகமதி இதைச் சாதாரணப் பிரிவுக்கு மாற்று என்று உத்தரவிட்டது சரிதான் என்று உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தாங்கிப் பிடிப்பது!

""குற்றம் செய்யும் நோக்கம் தொழிற்சாலை அதிபர்களுக்குக் கிடையாது. ஆகவே அந்தச் செயல் காரணமாக ஒருவர் இறந்தாலும் ஒன்றுதான்; ஆயிரக்கணக்கில் இறந்தாலும் ஒன்றுதான்'' என்று பதற்றமே இல்லாமல் எப்படி கே.ஜி. பாலகிருஷ்ணனால் இதை நியாயப்படுத்த முடிகிறது?

இதுதான் சட்டம் என்றால் சட்டத்தை எவன் மதிப்பான்? இந்தத் தீர்ப்பை நீதிப் பேரழிவு என்றும் நீதிப் பயங்கரவாதம் என்றும் சொல்வது நியாயம்தானே!

இப்படி ஓர் இழிந்த தீர்ப்பைக் கீழ்நீதிமன்றம் வழங்குவதற்கேற்ப அதற்குச் சாலை அமைத்துக் கொடுத்த உச்ச நீதிமன்ற நீதிபதி அகமதி மக்களின் வயிற்றெரிச்சலில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறார்!

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபர் மகேந்திரா உள்பட ஏழு பேருக்கு வெறும் இரண்டாண்டு சிறைத்தண்டனையை வழங்கிய கீழ்நீதிமன்ற நீதிபதிக்கு அவர்களைச் சிறைக்கு அனுப்புவதற்கு மனமில்லை! அவசரம் அவசரமாகப் பிணையில் விடுவித்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். இந்தக் கொடிய குற்றவாளிகளைத் தண்டித்த பிறகும் ஒருநாள் ஒருபொழுதுகூட அவர்கள் சிறையில் இருக்கவில்லை. அடுத்த நீதிமன்றத்தில் இன்னும் 25 ஆண்டுகளுக்கு வழக்கு நடக்கும். இந்த 7 பேரும் அந்த 2 ஆண்டுத் தண்டனையையும் அனுபவிக்கப் போவதில்லை.

முன்பெல்லாம் சந்தேகக் கேஸ் என்று ஒன்று போடுவார்கள். வீதியில் சும்மா போகிறவனை ஒரு கடையின் பூட்டை இழுத்து ஆட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஐயப்பட்டுப் பிடித்ததாகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து அவனை உள்ளே வைத்து விடுவார்கள்.

சிறைச்சாலைகள் குப்பனுக்கும் சுப்பனுக்கும் கட்டப்பட்டவைதானே! அமெரிக்க ஆன்டர்சனுக்காகவா கட்டப்பட்டது?

நச்சுவாயுக் கசிவுக்கு ஆன்டர்சன் முதலில் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் அவரை உடனடியாகப் பிணையில் விடுதலை செய்ய வைத்து மாநில அரசுக்குச் சொந்தமான தனி விமானத்தை அளித்து, தில்லிக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தவர் அன்றைய மத்தியப் பிரதேச முதலமைச்சர் அர்ஜுன் சிங். தன்னுடைய சொந்த ஊர் சுடுகாடாகிவிட்டது; சாகடித்தவனைக் காப்பாற்றுவதில் அவ்வளவு அவசரம்! அர்ஜுன் சிங்கை மகனாகப் பெற்றதைவிட, அவருடைய தாய் மலடியாகவே இருந்திருக்கலாம்!

அமெரிக்க நெருக்கடி இல்லாமல், அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியின் தூண்டுதல் இல்லாமல், ஒரு கொடிய குற்றவாளியை மாநில அரசே முன்னின்று விடுவித்துப் பாதுகாப்பாகத் தனி விமானத்தில் அனுப்பி வைப்பது என்பது நடக்கக்கூடிய காரியமா? ஒரு தனி மனிதன், மத்திய அரசின் துணை இல்லாமல் தில்லி விமான நிலையத்தை விட்டு ஒரு தனி விமானத்தில் அமெரிக்கா சென்றுவிட முடியுமா? முடியும் என்றால், நமக்கு ஓர் அரசுதான் எதற்கு? விமான நிலையத்தில் பாதுகாப்புக் கெடுபிடிகள் எதற்கு? பேருந்து நிலையங்கள்போல் ஆக்கிவிட வேண்டியதுதானே!

ராஜீவ் காந்தியின் யோக்கியதையே இதுதான் என்றால் அவருடைய மனைவி என்ற பேரில் இந்தியாவில் அதிகாரம் செலுத்த முடியுமா? இதுதான் சோனியாவின் அச்சம்! ஆகவே, எல்லாவற்றையும் மூடி மறைக்கும் வேலைகள் மும்முரமாகி இருக்கின்றன!

மத்திய புலனாய்வுத் துறை செயல்பட விடாமல் வெளிவிவகாரத்துறை குறுக்கிட்டது என்று புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் லால் வெளிப்படையாகச் சொன்னபிறகும், முதல்வர் அர்ஜுன் சிங் உத்தரவின் பேரில் தனி விமானத்தில் குற்றவாளியை போபாலை விட்டு அவசரமாகக் கடத்தியதாக அந்த விமானி சொன்ன பிறகும் தானே சாக்குக்குள் இருந்த பூனைக்குட்டி வெளிவந்திருக்கிறது!

நடந்த உண்மையை வெற்றிகரமாக 28 ஆண்டுகள் மக்களிடமிருந்து மறைத்து வைத்திருந்த காங்கிரஸ் மத்திய அரசு, இப்போது அதை ஒத்துக்கொண்டு நியாயப்படுத்த முயல்கிறது.

மத்திய அரசின் இசைவில்லாமல் தில்லியிலிருந்து தனி விமானத்தில் எப்படி அமெரிக்காவுக்கு ஒரு குற்றவாளி தப்பிச் செல்ல முடிந்தது என்ற கேள்விக்கு விடை சொல்வதைத் தவிர்த்துக் கொண்ட பிரணாப் முகர்ஜி, ஆன்டர்சனைத் தனி விமானத்தில் முதல்வர் அர்ஜுன் சிங் போபாலுக்கு வெளியே கொண்டு போயிருக்காவிட்டால், அங்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருக்கும் என்று கூறியிருக்கிறார்.

அதனுடைய பொருள் என்ன? ஆன்டர்சனை போபால் சிறையில் அடைத்திருந்தால், பிரெஞ்சுப் புரட்சியின்போது மக்கள் கொதித்தெழுந்து பாஸ்டில் சிறையை உடைத்துத் தரைமட்டமாக்கியதுபோல, மக்கள் போபால் சிறையை உடைத்துத் தரைமட்டமாக்கி, ஆன்டர்சனை இழுத்து வந்து உயிரோடு புதைத்திருப்பார்கள் என்பதுதானே!

சட்டம்-ஒழுங்கு என்பது தண்டிக்க வேண்டிய ஒரு குற்றவாளியைப் பாதுகாத்துத் தப்ப  வைக்கும்போது குலையுமா? அல்லது சட்டம் சண்டித்தனம் செய்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், ஒரு குற்றவாளிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும்போது குலையுமா? யோசித்துப் பேச வேண்டாமா மூத்த அரசியல்வாதி!

ஒரு கொடிய குற்றத்தை நியாயப்படுத்திவிட்டால், பிரணாப்பை பிரதமராக்கி விடுவாரா சோனியா காந்தி?

ஆன்டர்சன் மீதுள்ள வழக்குத் திறந்தே இருக்கிறதாம். சொல்லுகிறார் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி. பிடித்த குற்றவாளியைக் காப்பாற்றிப் பூச்செண்டு கொடுத்துத் தனி விமானத்தில் அனுப்பி விட்டு, வழக்கு உயிரோடுதான் இருக்கிறது என்று சொல்ல வெட்கமாக இருக்காதா, வீரப்ப மொய்லிக்கு?

போபால் நச்சுக்கசிவு வழக்கில்தான் என்றில்லை; பொதுவாகக் கொடுங் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் "மனப் பிறழ்ச்சி' மன்மோகன் அரசிடம் காணப்படுகிறது.

பாகிஸ்தானின் துணையோடு நாடாளுமன்றத்தின்மீது குண்டு வீசினான் அப்சல்; அவனுக்குத் தூக்குத் தண்டனை விதித்தது உச்ச நீதிமன்றம். அப்சலின் கருணை மனுக் கோப்பு தில்லி முதலமைச்சரிடமிருந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட பிறகு, உள்துறை அமைச்சகம் அதன்மீது முடிவெடுக்கும்.

அந்தக் கருணை மனுக் கோப்பைக் கிடப்பில் போடுமாறு ஏற்கெனவே உள்துறை அமைச்சராக இருந்த பாட்டீல், தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்திடம் கட்டாயப்படுத்தி இருக்கிறார். இதை அண்மையில் ஷீலா தீட்சித்தே மிகவும் வருத்தத்தோடு சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு பூனைக்குட்டியாகச் சாக்குக்குள் இருந்து வெளிவருகிறது.

ஏன் அப்சலின் கருணை மனுக் கோப்பைக் கிடப்பில் போட வேண்டும்? ஷீலா தீட்சித் காலத்தாழ்வின்றி அதை அனுப்பிவிட்டால், மத்திய அரசு உடனடியாக அதன்மீது முடிவெடுக்கும் நெருக்கடிக்கு உள்ளாகும்.

அப்சலைத் தூக்கிலே போடுவதை உறுதிப்படுத்தினால், ஒருவேளை இஸ்லாமிய மக்கள் வாக்களிக்க மாட்டார்களோ என்னும் அச்சம்.

ஒரு லட்சம் கோடி கொள்ளையடித்த ஆ. ராசாவிடம் அமைச்சர் பதவியைப் பிடுங்கிவிட்டால், தாழ்த்தப்பட்ட மக்கள் வாக்களிக்க மாட்டார்களோ என்னும் அச்சம்! அப்படிக் கருணாநிதி வேறு பயமுறுத்தி வைத்திருக்கிறார்.

ஓர் இஸ்லாமியன் வைக்கிற குண்டில் பல்லாயிரம் இஸ்லாமியர்களும் இறந்து போகிறார்கள்; ஒரு தாழ்த்தப்பட்டவன் அடிக்கிற கொள்ளையால், பல கோடித் தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றுவதற்கான நிதி ஆதாரம் தடுக்கப்பட்டு விடுகிறது என்று மக்களுக்குப் புரியும்படியாக நெஞ்சுரத்தோடு எடுத்துச் சொல்லிவிட்டு நீதியின்படி நடக்க வேண்டியதுதானே! அது முதுகெலும்புள்ள அரசால்தான் முடியும்! மன்மோகன் அரசால் முடியாது!

இன்னொரு கொடுமை அண்மையில் சிங்கள மந்திரிசபையில் அங்கம் வகிக்கிற டக்ளஸ் தேவானந்தா, கசாப்புக் கடைக்காரன் ராஜபட்சவோடு தில்லிக்கு வந்து பிரதமர் மன்மோகன் சிங்கின் கையைப் பிடித்துக் குலுக்கியிருப்பது!

அச்சுறுத்திப் பணம் பறித்தது; ஆளைக் கடத்தியது; ஒருவரைக் கொலை செய்தது என்று மூன்று கொடிய வழக்குகளில் சென்னை காவல்துறையால் குற்றம்சாட்டப்பட்டு, தேடுவோர் பட்டியலில் உள்ள டக்ளஸ் தேவானந்தா, மன்மோகன் சிங் கையைப் பற்றியபோது, அப்படியே தில்லி காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்திருக்க வேண்டாமா?

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒரு பிரபாகரனைப் பிடிக்க முடியவில்லை என்பதால், கருணாநிதியின் ஆசீர்வாதத்தோடு, சிங்கள அரசுக்கு உதவி, ஈழத்தையே சுடுகாடாக்கியதே காங்கிரஸ் மத்திய அரசு!

இன்னொரு கொலைக் குற்றவாளி டக்ளஸ் தேவானந்தா மன்மோகன் சிங்கின் கைகளில் வந்து சிக்கிய பிறகும் கோட்டைவிட்டது ஏன்?

போபாலையே மயானமாக்கிய ஆன்டர்சன், வெடிகுண்டுப் பயங்கரவாதி அப்சல், கொலைகாரன் டக்ளஸ் தேவானந்தா என்று எல்லோரும் மன்மோகன் சிங்கை வாழ்த்திக் கொண்டே வாழ்கிறார்கள்!

குற்றவாளிகளின் சொர்க்கம் இந்தியா!

Tuesday, February 23, 2010

இப்போதே வெயில் சுட்டெரிப்பது ஏன்

Front page news and headlines today

முன்னர் எல்லாம் கோடை காலம் என்றால் ஏப்ரல், மே தான். சில ஆண்டுகளாக மார்ச் துவக்கத்திலேயே கடும் வெயில் அடிக்கிறது. ஆனால் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு பிப்ரவரி இரண்டாம் வாரத்திலேயே கடும் வெப்பம் நிலவுகிறது. மே மாதத்தில் சுடும் சூரியன் இப்போதே சுட்டெரிக்கிறது.


காலை குளிர் இல்லை. மாலை தென்றலும் இல்லை. ஏன் இந்த திடீர் காலநிலை மாற்றம்? "என்ன ஆச்சு பூமிகோளத்திற்கு' என்று நாம் வியக்கிறோம். ""இந்த மாற்றத்திற்கு காரணம் மனிதர்களும், அவர்களின் கண்டுபிடிப்புகளும் தான்,'' என்கிறார் மதுரை விவசாயக் கல்லூரி உழவியல் துறைத் தலைவர் வ. கணேஷ் ராஜா.


அவர் கூறியதாவது:கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரை, ஆண்டு வெப்பம் உலகளவில் 0.6 டிகிரி செல்சியஸ் அளவு அதிகரித்தது. தற்போது ஆண்டு தோறும் 0.73 டிகிரி செல்சியஸ் ஆக அதிகரிக்கிறது. கடந்தாண்டு பிப்., 23ல் மதுரையின் வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ். பிப்., 25, 26களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் செல்வதற்கு வாய்ப்புள்ளது. கடந்த ஜனவரியில் பனியின் அடர்த்தி 0.210 மில்லிமீட்டர். தற்போது 0.110 மில்லிமீட்டர் ஆக குறைந்துள்ளது. ஒரு அறையில் நூறு பேர் இருக்கும் போது, மின்விசிறி ஓடினால் ஒருமணி நேரம் உட்காரலாம். மின்விசிறி இல்லாவிட்டால், 10 நிமிடம் கூட இருக்க முடியாது. அறை வெப்பமாகிவிடும். வியர்வை, மயக்கம் ஏற்படும். இதுதான் வெப்பமயமாக்கல். மூச்சு விடும் போது கார்பன் டை ஆக்சைடை, நாம் மட்டும் வெளியிடவில்லை. நெற்பயிரிலிருந்து மீத்தேன், வாகனங்களிலிருந்து கார்பன் மோனோ ஆக்சைடு, பெட்ரோலிய தொழிற்சாலையிலிருந்து நைட்ரஸ் ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு வாயுக்கள் வெளியேறுகின்றன.


மற்ற தொழிற்சாலைகளிலிருந்து சல்பர் டை ஆக்சைடு, கார்பன் டை ஆக்சைடு, புகை மற்றும் மின்சார உற்பத்தியிலிருந்து எல்லாவாயுக்களும் வெளிவருகின்றன. வீடுகளில் ஏ.சி., பிரிட்ஜ் பயன்படுத்தும் போது குளோரோ புளுரோ கார்பன் எனப்படும் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறுகின்றன. பத்தாண்டுகளுக்கு முன்புவரை இவ்வளவு வாயுக்கள் இல்லை.சுற்றுப்புறத்தில் சேரும் வாயுக்கள் அனைத்தும் வளிமண்டலத்தில் சேர்ந்து வெப்பமாகிறது. வாயுமண்டலம் வெப்பமாவதால் ஆக்சிஜன் குறையும். ஓசோன் படலம் என்பது சுத்தமான ஆக்சிஜன் நிரம்பியது. வெப்பத்தால், ஓசோன் படலத்தின் அடர்த்தி குறைத்துவிடுகிறது. இதனால் புறஊதா கதிர்கள் நேரடியாக சூரியனிலிருந்து வெளியேறி பூமியைத் தாக்கும்.

தென்துருவ, வடதுருவ பனிக்கட்டிகள், போர்வையாக இருந்து வெப்பத்தை குறைத்து நம்மை காக்கிறது. தொடர்ந்து வெப்பமயமாதலால் பனிக்கட்டிகள் ஆறு சதவீதம் உருகிவிட்டது. ஐஸ்கட்டிகள் உருகினால் ஆறு, கடலில் நீர்மட்டம் உயர்ந்துவிடும். இயற்கை நமக்கு கொடுத்த இருபெரும் பாதுகாப்பு வளையங்களான ஓசோன் படலம், பனிப்பாறை இரண்டையும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம். சூரியவெப்பத்தின் அளவு ஒரே மாதிரியாக இருந்தால் கூட, சுற்றுப்புறத்தில் வளிமண்டலத்தில் சேரும் வாயுக்களின் அளவு அதிகரிக்கிறது.

இதனால் நாளுக்கு நாள் வெப்பம் அதிகமாகிறது. தற்போது உபயோகிக்கும் பொருட்களிலிருந்து வெளிவரும் வாயு மற்றும் புகையை 40 சதவீதமாக குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அப்படி செய்தால், தற்போதுள்ள வெப்பநிலையையாவது தக்கவைக்கலாம். ஒரு டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அதிகரித்தால், விவசாயத்தில் 40 சதவீத விளைச்சல் குறைந்து விடும். உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலையில், அதிக வெப்பநிலையால் உற்பத்தி குறைந்துவிடும் என்று எச்சரிக்கிறார் பேராசிரியர் கணேஷ்ராஜா

Thursday, February 18, 2010

ஆயிரமாவது ஆண்டில் தஞ்சைப் பெரிய கோயில்

உலகப்பாரம்பரியச் சின்னமாகப் புகழ்பெற்று விளங்கும் தஞ்சைப் பெரிய கோயிலைக் காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்கின்றனர். இச்சுற்றுலா தலத்துக்கு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், அயல்நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான அயல்நாட்டினர் வருவதால் நம் நாட்டின் அன்னியச் செலாவணி வருவாய் அதிகரிக்கிறது. நம் நாட்டினரும் அயல்நாட்டினரும் இக்கோயிலின் அருமை பெருமைகளை அறிந்துகொள்ள தொல்லியல்துறை தகுந்த ஏற்பாடுகளைச் செய்து சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டும்.

பெரியகோயில் வளாகத்துக்குள் சுமார் 200 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய ஒரு திரை அரங்கம் ஏற்படுத்தலாம். இவ்வரங்கு குளிர்சாதன வசதியுடையதாக இருந்தால் மிகவும் நன்று.
இக்கோயிலைப்பற்றிய செய்திகளையும் கதைகளையும், சிற்பங்களையும், ஓவியங்களையும், குறுந்தகடுகள் மூலம் பெரிய திரையில் ஒளிபரப்பலாம். குறுந்தகடுகள் 15 நிமிடங்கள், 30 நிமிடங்கள், ஒரு மணி நேரம் காணக்கூடியதாக இருத்தல் நன்று.

இதில் முக்கியமாகப் பலமொழிகளில் இக்குறுந்தகடுகள் இருத்தல் மிகமிக அவசியம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, இந்தி, ஒரியா, உருது, ஆங்கிலம், பிரெஞ்சு, டச்சு, இத்தாலி, ஜெர்மனி, போர்ச்சுகீசு போன்ற மொழிகளில் இருக்கலாம்.

÷இக்கோயிலைக் காண ஏழைகளும், செல்வந்தர்களும், படித்தவர்களும், படிக்காதவர்களும், வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், மாணவர்களும் வருகின்றனர்.

÷இந்திய மாநிலங்களிலிருந்தும், அயல்நாடுகளிலிருந்தும், வருபவர்கள் பலருக்குத் தமிழோ, ஆங்கிலமோ தெரிய வாய்ப்பில்லை. ஆதலால் இங்கு தமிழிலோ, ஆங்கிலத்திலோ எழுதிவைத்துள்ள செய்திகளைப் படித்து அறிந்து கொள்ள முடியாது. எனவே, இக்கோயிலைப் பற்றிய செய்திகளையும், கதைகளையும் தங்கள் தாய்மொழியில் கேட்டும், கோயிலின் அழகையும், சிற்பங்களையும், ஓவியங்களையும் வெண்திரையில் பார்த்தும் மகிழ்வார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. திரையில் ஒரு மொழியில் செய்திகளைச் சொல்லும்போது அத்திரையின் அடிப்பகுதியில், அடிக்குறிப்பின் மூலம் வேறு ஒரு மொழியில் அதாவது தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ செய்திகளைத் தெரியப்படுத்தலாம்.

குறுந்தகடுகளின் நேரத்துக்கேற்றபடியும், அரங்கின் பராமரிப்புக்கேற்றபடியும் பார்வைக்கட்டணம் நிர்ணயிக்கலாம். குளிர்சாதன வசதியுடன் காட்டப்படும் காட்சிகளுக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கலாம். பொதுவாக லாப நோக்கமில்லாமலும், பராமரிக்கும் செலவுக்கேற்றவாரும் கட்டணம் வசூலித்தல் நன்று. சுற்றுலா பயணிகள் தங்கள் பொருளாதார நிலைக்கேற்றவாரும், காலநிலைக்கேற்றவாரும் குறுந்தகடுகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். அயல்நாட்டினரும், சுற்றுலா ஆர்வமுடையவர்களும், ஆராய்ச்சியாளர்களும், ஆசிரியர்களும் ஒரு மணிநேர குறுந்தகட்டினைக் காண வாய்ப்புள்ளது. தனிப்பேருந்துகள் மூலம் வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்ள அனுமதிக்கலாம். பள்ளி, கல்லூரிகளிலிருந்து வரும் மாணவர்களுக்குச் சலுகைக் கட்டணத்தில் இவ்வரங்கில் காட்சிகளைக் காண்பிக்கலாம்.

குறுந்தகடுகளில் கூறப்படும் முக்கிய செய்திகளையும், காட்டப்படுகின்ற ஒளிப்பதிவுகளையும், வல்லுநர்களைக் கொண்டு இறுதிசெய்யலாம். காட்சிகளைக் காண்பிக்கும்போது, வாத்தியங்களின் இசையைப் பயன்படுத்துதல் நலமாக இருக்கும். மேலும் கீழ்க்கண்ட செய்திகளைப் பதிவுசெய்தல் நன்று.

சோழப்பேரரசின் தலைநகரான தஞ்சை மாநகரில் ஒரு பெரிய கோயிலை அருண்மொழிவர்மன் என்னும் ராஜராஜசோழன் கட்டினான். இக்கோயில் வியத்தகு தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டதால் அவனுடைய புகழ் உலகெங்கும் இன்றும் பரவியிருக்கிறது.

பிரகதீஸ்வரர் ஆலயம் என்று அழைக்கப்படும் இக்கோயில், 793 அடி நீளம், 397 அடி அகலம் கொண்டது. நடுவிமானம் 216 அடி உயரத்தில் உள்ளது. உச்சியில் உள்ள கருங்கல்லின் எடை 80 டன் ஆகும். இவ்வாலயக் கட்டுமானப்பணி முடிய 4 ஆண்டுகளுக்கு மேலாயிற்று. கி.பி. 1010 -ம் ஆண்டில் குடமுழுக்கு செய்யப்பட்டதால் கி.பி. 2010 -ம் ஆண்டில் ஆயிரமாவது ஆண்டுவிழா காண்கிறது.

தஞ்சை மாவட்டத்தில் மலைகளைக் காண முடியாது. ஆதலால் அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்தே கருங்கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இக்காலத்தில் உள்ளதுபோல் அக்காலத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லை. ஆகையால் மிகவும் இன்னலுற்றே இக்கோயில் திருப்பணி சிறப்பாகச் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

கோயிலில் நுழைந்தவுடன் நம் கண்முன்னே காணும் மிகப்பெரிய நந்தி காண்போரைக் கவரும் வகையில் உள்ளது. சிவபெருமானின் வாகனமாகக் கருதப்படும் இந்நந்தி, ஒரே கல்லால் செதுக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். இது 19 1/2 அடி நீளமும், 8 1/4 அடி அகலமும், 12 அடி உயரமும் கொண்டுள்ளது. இந்தியாவில் ஒரே கல்லைக்கொண்டு செதுக்கப்பட்ட பெரிய நந்தி இதுவேயாகும்.

அக்காலத்தில் ராஜராஜன் இலங்கைமீது படையெடுத்து அந்நாட்டின் ஒரு பகுதியை தன் ஆட்சியின்கீழ் கொண்டு வந்துள்ளான். தன் ஆட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள சில கிராமங்களை தஞ்சைக் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளான். இச்செய்தி அங்குள்ள ஒரு கோயில் கல்வெட்டுமூலம் தெரியவருகிறது.

தஞ்சைக் கோயில் கல்வெட்டுகள் மூலம் ராஜராஜனின் மேலைச்சாளுக்கிய படையெடுப்புகளை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வாலயத்திற்கு ராஜராஜன், அவனைப் பின்தொடர்ந்த அரசர்கள், உறவினர்கள், அரசு அதிகாரிகள் அளித்த அறக்கட்டளைகள் பற்றியும், நன்கொடைகள் பற்றியும் தெரிந்துகொள்ள முடிகிறது.

மற்றொரு கல்வெட்டின் மூலம் ""ராஜராஜேச்சுவர நாடகம்'' இருந்ததாகத் தெரியவருகிறது. விழாக்காலங்களில் இந்நாடகம் தமிழ்மொழியில் நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் நாடகம் நடத்துவதற்கு 120 கலம் நெல் ராஜேந்திர சோழனால் வழங்கப்பட்டுள்ளது. இந்நாடகம் இப்போது கிடைக்கப் பெறவில்லை. ஆலயங்களின் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் எவ்வாறு சோழர்களின் சமூக, அரசியல், பொருளாதார வாழ்க்கையை விவரிக்கின்றன என்பதைத் தெரியப்படுத்தலாம்.

பெரியகோயிலில் உள்ள கருவறையைச் சுற்றிக் காணப்படும் ஓவியங்களையும், ஓவியங்களில் காணப்படும் கதைகளையும் கூறலாம். காலத்தால் அழியாத ஓவியங்களை அக்காலத்தில் மூலிகைகள், பூக்கள், வேர்கள், பட்டைகள், முட்டை, வச்சிரம் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி வரைந்துள்ளனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நம் நாட்டில் சிறப்புற்று விளங்கும் நடனக்கலை பற்றிய விளக்கங்கள் சிற்பவடிவில் இக்கோயிலில் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு சுமார் 400 நடன மங்கையர்களுக்குமேல் பணிபுரிந்துள்ளனர் என்ற செய்தி வியக்கத்தக்க ஒன்றாகும்.

தஞ்சை கோயிலில் 13 அடி உயரமுள்ள லிங்கமும், நந்தியும் மிகப்பெரிய உருவில் காட்சியளிப்பதால் இக்கோயிலை "பெருவுடையார்கோயில்' என்று அழைக்கின்றனர். இப்பெரிய சிவன்கோயிலைக் கட்டியதால் ராஜராஜன் சிவபாதசேகரன் என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்படுகிறான். இந்தச் சிவன்கோயிலில் ஒரு சிறிய புத்தர்சிலை செதுக்கப்பட்டுள்ளது விந்தையாக இருக்கிறது. மேலும் நாகப்பட்டினத்தில் அயல்நாட்டு அரசனால் கட்டப்பட்ட புத்தர் கோயிலுக்கு ராஜராஜன் ஆனைமங்கலம் என்னும் ஊரை தானமாக வழங்கிய செய்தியை செப்பேட்டில் செதுக்கியுள்ளான். மேலும் திருமாலுக்கு மணலூரில் ஒரு வைணவத் திருக்கோயிலும் எடுத்துள்ளான். இதிலிருந்து இவ்வரசனின் சமயப்பொறை தெளிவாகத் தெரிகிறது.

ராஜராஜனுக்குப்பின் அரசாண்ட அவனது மைந்தன் ராஜேந்திரன் தஞ்சைக்கோயிலைப் போலவே ஜெயங்கொண்ட சோழபுரத்தில் ஒரு சிவன்கோயிலைக் கட்டியுள்ளான். இத்தலமும் தமிழகத்தில் ஒரு சுற்றுலா மையமாகத் திகழ்கிறது. தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டுகளும், சிற்பங்களும், கலைக்கூடங்களும், கட்டடங்களும், ஓவியங்களும், செப்புப்படிமங்களும் சோழர்களின் இயல், இசை, நாடகம், கலை, பண்பாடு, கலாசாரம், நாகரிகம் போன்றவற்றின் பெருமைகளையும், பழமையையும் பறைசாற்றுகின்றன. ஓராயிரமாண்டு பழமையான தஞ்சை பெரியகோயிலின் புகழை இத்தரணி மக்களுக்குத் தெரியப்படுத்துவது அரசின் கடமையாகும்.

என்னதான் முடிவு?

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்திருக்கிறது. விலைவாசி உயர்வுப் பிரச்னையில் மத்திய அரசு, மாநில அரசுகளையும் மாநில அரசுகள், மத்திய அரசையும் மாறிமாறிக் குற்றஞ்சாட்டிக்கொள்வதில் அர்த்தமில்லை.

கடந்த 2004}ல் குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயத்தை - ஒரு குவிண்டால் நெல் விலையை ரூ. 580-ல் இருந்து ரூ. 1,030 ஆகவும், கோதுமை விலையை ரூ. 620-ல் இருந்து ரூ. 1,100 ஆகவும் உயர்த்தியது மத்திய அரசு. பொருளாதார நிபுணர்கள் இப்போதைய பிரச்னைக்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடுவது இதைத்தான்.

ஆனால், இது முற்றிலும் தவறான கருத்து. இந்திய விவசாயிகளுக்கு விவசாயத்தின் மீது இருந்த விரக்தி கொஞ்சமேனும் குறைய மத்திய அரசின் இந்த முடிவு காரணமாக இருந்தது என்பதுதான் உண்மை. இதன் விளைவாகத்தான் 2008}ல் சாதனை அளவாக நாட்டின் உணவு தானிய உற்பத்தி 23 கோடி டன்களாக உயர்ந்தது.

அரிசி}கோதுமை விலை 200 சதம் அளவுக்கு உயர்ந்திருந்தாலும், இப்போதைய விலைவாசி உயர்வுக்கான முக்கிய காரணி அதுவல்ல. ஏனெனில், ஒரு சராசரி இந்தியக் குடும்பத்தின் மாதச் செலவில் அரிசி}கோதுமைக்கான செலவு என்பது 10 சதவீதத்துக்கும் குறைவுதான். தவிர, ரேஷன் விநியோகமும் அரிசி}கோதுமை செலவை ஓரளவுக்குக் கட்டுப்படுத்துகிறது.

பிரச்னை அரிசி-கோதுமையின் விலை உயர்வு மட்டுமல்ல; எல்லா தானியங்களின் விலையும் உயர்ந்திருக்கிறது; எல்லா மளிகைப் பொருள்களின் விலையும் உயர்ந்திருக்கிறது; சலவைப் பொருள்களில் தொடங்கி மருந்துகள் வரை எல்லா ரசாயனப் பொருள்களின் விலையும் உயர்ந்திருக்கிறது; எவ்வித நியாயமுமின்றி வீட்டு வாடகைகூட 25-லிருந்து 100 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. விலைவாசி உயர்வு என்பது அரிசி, கோதுமை அல்லது உணவுதானிய விலைகளுக்கு மட்டும் ஏற்பட்ட ஒன்றல்ல. குறிப்பாக மூன்று முக்கியமான விஷயங்களில் நம் அரசு தொடர்ந்து தவறிழைக்கிறது. அதன் தொடர் விளைவுதான் விலைவாசி உயர்வுக்கு அடிப்படைக் காரணமாக அமைகிறது.

1. உலகின் ஐந்தாவது மிகப் பெரிய பெட்ரோலிய நுகர்வோர் இந்தியா. ஆனால், உள்நாட்டில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் நாட்டின் தேவையில் 30 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் 40 சதம் அளவுக்கு நாட்டின் பெட்ரோலியத் தேவை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால்,பெட்ரோலிய நுகர்வைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, பெட்ரோலியப் பொருள்களுக்கு ஏறத்தாழ 50 சதம் வரை வரி விதித்து வருமானம் பார்க்கிறது. சர்வதேசச் சந்தையில் விலை உயரும்போதெல்லாம் இங்கும் விலையை உயர்த்தி உயர்த்தி சரக்குப் போக்குவரத்தை அரசே அதிகச் செலவுமிக்கதாக மாற்றிவிட்டது.

2. அறுவடைக்குப் பிந்தைய ரூ. 70 ஆயிரம் கோடி மதிப்புள்ள உற்பத்திப் பொருளை நாம் வீணடிக்கிறோம். இந்தியாவில் ஆண்டுக்கு 17.5 கோடி டன் பழங்கள், காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், இவற்றில் பதப்படுத்தப்படுவது 2.2 சதம்தான். முறையான பதப்படுத்தல் கட்டமைப்பு இல்லாததே இதற்குக் காரணம். அரசு இந்தத் தவறை ஒப்புக்கொள்கிறது. ஆனால், கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதிலோ, உணவுப் பொருள்கள் வீணாகாமல் தடுப்பதிலோ தீவிர நடவடிக்கைகளை எடுக்கிறதா என்றால் இல்லை.

3. பதுக்கலையும் கடத்தலையும் அநியாய விலை நிர்ணயத்தையும் வேடிக்கை பார்க்கிறோம். இது ஏதோ பெரிய அளவில் மட்டும் நடக்கும் சங்கதியல்ல; டீக்கடை, பெட்டிக்கடை வரை தொடர்கிறது. நம் தெருமுனையில் கடை வைத்திருக்கும் டீக்கடைக்காரும் பெட்டிக்கடைக்காரரும்கூட விலைவாசியைத் தீர்மானிக்கிறார்கள் என்பதே உண்மை.

தமிழகத்தில் 2008}ல் ஒரு டீயின் விலை ரூ. 2} 3. இப்போது ரூ. 4}6. இத்தனைக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பசும்பால், எருமைப்பால் விலையை லிட்டருக்கு முறையே ரூ. 2, ரூ. 5 மட்டுமே உயர்த்தியிருக்கிறது அரசு. பால் விலையும் சர்க்கரை விலையும் உயர்ந்திருக்கின்றன. ஆனால், டீ விலையை 200 சதமாக உயர்த்தும் அளவுக்கு நிச்சயம் அவற்றின் விலை உயரவில்லை. ஒரு லிட்டர் பால் அதிகபட்சம் ரூ. 24}க்கு விற்கப்படும் சூழலில், 50 மி.லி. பால்கூட சேர்க்கப்படாத 100 மி.லி. டீயின் விலை ரூ. 5 என்பது நிச்சயம் கொள்ளைதான்.

ஆனால், அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது. இது "சிங்கிள் டீ பிரச்னை' என்று நினைக்கிறது. ஆனால், டீ விலை உயர்வோ ஒரு பெரிய சமூக விளைவாக மாறுகிறது. எங்கெல்லாம் பொருள்கள் அநியாய விலை விற்கப்படுவதாக நினைத்து நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்களோ அங்கெல்லாம் இந்தப் பதிலை எதிர்நோக்க வேண்டியிருக்கும்: ""எந்தக் காலத்தில் இருக்கிறார்கள்? டீ விலை ரூ. 5; தெரியுமா?''

அதேசமயம் டீக்கடைக்காரரிடம் டீ விலை உயர்வு குறித்துக் கேளுங்கள், அவருடைய பதில் இப்படி இருக்கும்: ""வேறென்ன செய்ய முடியும்? எல்லாப் பொருள்கள் விலைகளும் உயர்ந்துவிட்டன.''
சந்தையில் ஒரு கிலோ ரூ. 15-க்கு விற்கும் வெங்காயத்தை சந்தையிலிருந்து நான்கு தெருக்கள் தள்ளியிருக்கும் ஒரு கடையில் ரூ. 28-க்கு விற்க இந்திய வியாபாரிகளால் மட்டுமே முடியும். யார் கேட்பது? அவர்களிடம்தான் பதில் இருக்கிறதே?
இப்படியாக, இந்தியாவில் ஒவ்வொருவரும் மற்றவர்களின் பெயரால் விலையை ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதில், அரசாங்கத்தின் மிகப் பெரிய தவறு என்னவென்றால், இதையெல்லாம் அனுமதிப்பது; வேடிக்கை பார்ப்பது; செயல்படாமல் இருப்பது.

மக்கள்தொகைப் பெருக்கத்தையும் எதிர்கால உணவுத் தேவையையும் எதிர்கொள்ளும் வகையில், நாட்டின் விவசாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், பெட்ரோலியப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த ரேஷன் முறையைக் கொண்டுவர வேண்டும். அத்தியாவசியப் பொருள்களைக் கையாள்வதற்கென்று பிரத்யேகமான - மலிவான சரக்குப் போக்குவரத்து அமைப்பை உருவாக்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருள்களுக்கு அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கும், பதுக்கலைத் தடுக்கும் தன்னாட்சி அதிகாரமிக்க அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். உணவு மானியமாகச் செலவிடப்படும் ரூ. 1 லட்சம் கோடி முறையாகச் சென்றடைய பொது விநியோக அமைப்பைக் கட்டுக்கோப்பானதாக மாற்ற வேண்டும்.

இதையெல்லாம் செய்யாமல் விலைவாசியைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது கானல் நீரைத் தேடி நெடும்பயணம் போகும் வீண் முயற்சியாகத்தான் இருக்கும். ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய். ஒரு சிங்கிள் டீ ஆறு ரூபாய். கேலிக்கூத்தாக அல்லவா இருக்கிறது ஆட்சியின் லட்சணம்?